Wednesday, February 9, 2011

காதலர்களுக்கு சமர்ப்பணம்


ஒருதலைக் காதலோடு தினம் துடிப்பவர் ஒருபுறம்
பெற்றோர் எதிர்போடு போராடுவோர் மறுபுறம்
காதலன் தொலைவில் இருக்க தினம் காத்திருப்போர் மறுபுறம்
காதலர்கள் பலவிதம் காதல் இன்பம் ஒருசுகம்
எப்பேர்ப்பட்ட காதலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்

ஆனந்தம் உனக்குள் குடியேற வேண்டுமா ?
அழுகின்ற சுகம் அறிய வேண்டுமா
தனியாகப் பேசும் தனிச்சுகம் வேண்டுமா
இலக்கியத் தமிழில் கவிபாட வேண்டுமா

கண்ணாடி முன்னே நீ பேச வேண்டுமா
கனவுலகத்தில் தினம் வாழ வேண்டுமா
கைக்குட்டையை தினம் நனைக்க வேண்டுமா
காற்றிலே நீ மிதக்க வேண்டுமா

உன்னைப் பற்றியே நீ அறிய வேண்டுமா
உன் இதய ஒலியை நீ கேட்க வேண்டுமா
உன் குறைகளை நீயே திருத்த வேண்டுமா
உன் புகழ் பாட வேறொருவர் வேண்டுமா

பரிசுப் பொருட்களின் பலன் வேண்டுமா
பொய்யை மெய்யாக்கும் திறன் வேண்டுமா
தினசரி உனக்கு சக்தி வேண்டுமா
சத்தம் போடாமல் முத்தம் வேண்டுமா

இயற்கையை ரசிக்கும் இன்பம் வேண்டுமா
இரவுகள் எல்லாம் பகலாக வேண்டுமா
பட்டினி கிடந்து பழக வேண்டுமா
பாசத்தோடு நேசம் வேண்டுமா

காசில்லாமல் பொருள் வாங்க வேண்டுமா
கைத்தொலைபேசியின் கனம் அறிய வேண்டுமா
கீபோட்டில் உனக்கு கைத்திறன் வேண்டுமா
கடவுளைத் தினம் நீ தரிசிக்க வேண்டுமா

மேற்சொன்ன யாவும் ஒன்றாய் வேண்டுமா
வேண்டுமென்றால் காதலித்துப் பார்
கற்பனை வளர்த்து, நான் கவி பாடி முடித்தேன்
காதல் கசப்போ இனிப்போ நான் அறிய மாட்டேன்